Friday, February 7, 2014

அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்-திருவரங்குளம்(புதுகோட்டை மாவட்டம் )



                          அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்                                                                     திருவரங்குளம்(புதுகோட்டை மாவட்டம் )


நட்சத்திர கோவில்கள் :


நட்சத்திரம் :பூரம் 


ஸ்தல வரலாறு :

சோழமன்னன் கல்மாஷபாதனுக்கு நீண்ட காலமாகியும் குழந்தை பாக்கியம் இல்லை. சிவபக்தனான இவன், தனக்கு பின் சிவ சேவை செய்ய ஆளில்லை என்பதை நினைத்து வருந்தி, அகத்திய முனிவரிடம் முறையிட்டான். மன்னனின் குறை நீங்க, திருவரங்குளம் சென்று அங்கிருக்கும் சிவலிங்கத்தை வணங்கும்படி அவர் கூறினார். மன்னனும் இத்தலம் வந்து சிவலிங்கத்தை தேடி அலைந்தான். அப்பகுதியில் தான் இருக்கும் இடத்தை அரசனுக்கு உணர்த்த, சிவபெருமான் திருவுளம் கொண்டார். அப்போது அப்பகுதியில் பசு மேய்க்கும் இடையர்கள் மூலம் ஒரு தகவல் அறிந்தான். அப்பகுதி வழியாக யாராவது பூஜைப் பொருள்களைக் கொண்டு வந்தால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் தவறி விழுவதாக அவர்கள் கூறினர். இதையடுத்து மன்னன் அங்கு சென்று பூமியில் தோண்டிப்பார்த்தான். அப்போது பூமியிலிருந்து ரத்தம் பீய்ச்சியடித்தது. அவ்விடத்தில் ஒரு லிங்கம் தென் பட்டது. சிவனின் தலையில் கீறிவிட்டோமோ என வருத்தப்பட்ட மன்னன், உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றான். இறைவன் மன்னனை தடுத்தாட்கொண்டு பார்வதியுடன் திருமணக் கோலத்தில் தரிசனம் கொடுத்து, அந்த இடத்தில் எழுந்த கோயிலே இது. ஒரு பூர நட்சத்திர நாளில் தான் இந்த நிகழ்ச்சி நடந்தது. இறைவனின் அருளால் மன்னன் கோயில் கட்டினான்.அவனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.




கோயில் வெளிப்பிரகாரத்தில் பொற்பனை மரம் இருந்துள்ளது. இதிலிருந்து கிடைக்கும் பொன் பழங்கள் மூலம் பணம் பெற்று இந்த கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அந்த இடத்தில் அதன் அடையாளமாக கல்ஸ்தூபி உள்ளது. 12ம்நூற்றாண்டிற்கும் முன்னால் சோழர்கள், பாண்டியர்களின் திருப்பணியில் உருவான கோயில் இது. இத்தல தீர்த்தம் சிவனது தலையில் இருந்து உருவானதால் ஹர தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இதனால் தான் இத்தலம் திருவரங்குளம் ஆனது.

ஸ்தல சிறப்பு :

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.





ஸ்தல பெருமை :

இக்கோயிலைச்சுற்றி சுமார் 150 கி.மீ. சுற்றளவில் உள்ள பெரும்பாலான மக்கள் இத்தல இறைவனை குலதெய்வமாக வழிபாடு செய்கின்றனர். அம்மன் பெரியநாயகி நான்கு திருக்கரத்துடன் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருளுகிறாள். இப்பகுதியில் வாழ்ந்த கட்டுடையான் செட்டியார் வம்சத்தில் இத்தல அம்மன் பெண்குழந்தையாக பிறந்து வளர்ந்ததாக கூறப்படுகிறது. எனவே இப்போதும் கூட இந்த வம்சத்து பெண்கள் இக்கோயிலுக்கு வந்தால், தங்கள் வம்ச பெண்ணின் மாப்பிள்ளையாக சிவனை நினைத்து முக்காடு போட்டு வழிபாடு செய்யும் பழக்கம் உள்ளது.




சிறப்பம்சம்:
பூர தீர்த்தம் என்பது அக்னிலோகத்தில் உள்ள ஒரு புனித தீர்த்தமாகும். பூர நட்சத்திர லோகத்தில் சிவ தீர்த்தம், நாக தீர்த்தம், ஞான பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஸ்ரீதீர்த்தம், ஸ்கந்த தீர்த்தம், குரு தீர்த்தம் ஆகிய ஏழு தீர்த்தங்கள் உண்டு. இந்த ஏழு தீர்த்தங்களும் இத்தலத்தில் இருப்பதால் இது பூரம் நட்சத்திரத்திற்குரிய கோயிலானது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் பிறந்தநாள், மாதாந்திர நட்சத்திர நாள், திருமணநாள், ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் இங்கு வழிபடலாம். அடிக்கடி சென்று வழிபாடு செய்ய வேண்டிய முக்கியதலம்.




பொது தகவல்:
   
  பூரம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: ஒழுக்கமும், தைரியமும் இவர்களிடம் மேலோங்கி இருக்கும். புத்திக்கூர்மையோடு எதையும் அணுகுவர். வியாபாரத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். விவசாயப் பணிகளில் நாட்டம் கொள்வர். உண்மை, நீதி உடையவர்களாக இருப் பர். மக்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழ்வர். சிவனது மூலஸ்தானத்திற்கு பின் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரின் தனி சன்னதி உள்ளது. பிரகாரத்தில் பொற்பனை விநாயகர், அரங்குள விநாயகர், வீணாதர தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நந்தி, சதுர்த்தி விநாயகர், சப்த மாதர்கள், 63 நாயன்மார்கள், ஐயனார், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சரஸ்வதி, மகாலட்சுமி, ஜேஷ்டா தேவி, பாலமுருகன், நவகிரகம், பைரவர், சூரியன், சந்திரன், நடராஜர், நால்வர் சன்னதிகள் உள்ளன.  
   

பிரார்த்தனை
   
 
பூரம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், கிரக தோஷம், நாகதோஷம், மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அம்மனிடம் உள்ள ஸ்ரீசக்கரத்தை நினைத்து வழிபட்டால் பலன் கிடைக்கும்.





   
நேர்த்திக்கடன்:
   

  சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.





கோவில் விவரங்கள் :

மூலவர்                      :             ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் (திருவரங்குளநாதர்)

அம்மன்/தாயார்       :             பிரஹன்நாயகி (பெரியநாயகி)

தல விருட்சம்                 :             மகிழமரம்

தீர்த்தம்                           :                ஹர தீர்த்தம்

ஆகமம்/பூஜை       :                காரண ஆகமம்

பழமை                      :             1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்              :             நிம்பாரண்ய சேத்திரம்

ஊர்                              :             திருவரங்குளம்

மாவட்டம்                 :                புதுக்கோட்டை

மாநிலம்                      :             தமிழ்நாடு





அமைவிடம் :

புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் திருவரங்குளத்தை அடையலாம். 

No comments:

Post a Comment