Saturday, February 8, 2014

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்- குருவித்துறை, சோழவந்தான்(மதுரை மாவட்டம் )



    அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்- குருவித்துறை,                 சோழவந்தான்(மதுரை மாவட்டம் )

நட்சத்திர கோவில்கள் :

நட்சத்திரம் :சித்திரை 


ஸ்தல வரலாறு :

முன்னொரு காலத்தில் நடந்த தேவாசுர போரில், ஏராளமான அசுரர்கள் மாண்டனர். அவர்களை, அசுர குரு சுக்கிராச்சாரியார் ம்ருதசஞ்சீவினி மந்திரம் மூலம் உயிர் பெறச்செய்தார். அந்த மந்திரத்தை கற்றுக்கொள்ள விரும்பிய தேவர்கள், தங்கள் குருவான பிரகஸ்பதியின் (குரு) மகன் கசனை அழைத்து, அசுர குருவிடம் சென்று மருதசஞ்சீவினி மந்திரத்தை உபதேசம் பெற்று வா, என்றார்கள். கசனும் தன் தந்தை வியாழபகவான் ஆசியுடன் அசுரலோகம் சென்றான். அவனை அசுரகுரு சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி ஒரு தலையாகக் காதலித்தாள். அவள் மூலமாக சுக்ராச்சாரியாரிடம் இருந்து கசன் மந்திரம் கற்றுக் கொண்டான். இதையறிந்த அசுரர்கள் கசன் உயிரோடு இருந்தால் அசுரர்குலத்திற்கு ஆபத்து வந்துவிடும் என நினைத்து , அவனைக் கொன்று சாம்பலாக்கினர்.





அசுரகுரு அறியாமலேயே அவர் குடிக்கும் பானத்தில் கலக்கி கொடுத்து விட்டனர். கசனைக் காணாத தேவயானி, தன் தந்தையிடம், கசனின் இருப்பிடத்தை கண்டறியும் படி வேண்டினாள். அசுரகுரு தன் ஞான திருஷ்டியால் கசன் தன் வயிற்றில் இருப்பதை அறிந்து, ம்ருதசஞ்சீவினி மந்திரம் மூலம் கசனை உயிர் பெறச் செய்தார். அவரது வயிற்றைக் கிழித்துக் கொண்டு கசன் வெளிவந்ததால், சுக்ராச்சாரியார் இறந்து விட்டார். தன்னைக் காப்பாற்றிய அசுரகுரு இறந்து கிடப்பதைக் கண்டு தான் அவரிடம் கற்ற மந்திரம் மூலம் அவரை உயிர்பெறச் செய்தான். சுக்ராச்சாரியார் தன் மகள் தேவயாணியை மணம் முடித்து செல்ல வேண்டும் என்று கூற, அதற்கு கசன், உங்கள் வயிற்றிலிருந்து மீண்டு வந்துள் ளதால் தேவயானி எனக்கு சகோதரி முறை வேண்டும், என பக்குவமாகக் கூறி தேவலோகம் கிளம்பினான். கடும்கோபம் கொண்ட தேவயானி, கசனை ஏழு மலைகளால் தடுத்து நிறுத்தி அசுரலோகத்திலேயே தங்க வைத்தாள். கசனைக் காணாத பிரகஸ்பதி, மகனை மீட்டுத்தரும்படி இத்தலத்து பெருமாளை வேண்டி தவமிருந்தார். பெருமாள், சககரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டார். பின்பு பிரகஸ்பதியின் வேண்டுதலுக்கு இணங்கி இங்கேயே எழுந்தருளினார்.





சித்திரை சிறப்பம்சம்:

குரு பகவானாகிய பிரகஸ்பதிக்கு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று ஒரு சித்திரத் தேரில் எழுந்தருளி காட்சி தந்தார். எனவே தான் இத்தலம் சித்திரை நட்சத்திரத்திற்குரிய கோயிலாக விளங்குகிறது.இங்குள்ள சித்திர ரத வல்லபபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம். கோயிலுக்கு எதிரே குருபகவான், சக்கரத்தாழ்வாருடன் சுயம்பு வடிவில் இருக்கிறார்.


ஸ்தல சிறப்பு :

இங்கு குருபகவான், சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். இங்கு பெருமாள் தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம். இத்தலத்தில் நவக்கிரகத்தில் வியாழன் கிரகம் யோக குருவாக அருள்பாலிக்கிறார்.




ஸ்தல பெருமை :

நமக்கு குருபெயர்ச்சி பாதிப்பு என்றால் குரு (வியாழன்)விடம் சென்று முறையிடுவோம். அந்த குருவுக்கே பாதிப்பு என்றால் யாரிடம் போய் முறையிடுவார். குருபகவானும் தன் மகன் கசனுக்காக உலக நாயகன் நாராயணனை நோக்கி தவம் செய்த இடம் தான் குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள்கோயிலாகும்.உலகில் வியாழ பகவானே நாராயணனை நோக்கி தவம் செய்யும் இடம் இந்த திருத்தலம் என்றும் வியாழன் சுயம்புவாக தவக்கோலத்தில் வீற்றிருப்பதும் இங்குதான் என நம்பப்படுகிறது. 12 ஆழ்வார்களின் சிலைகள் ஒன்று சேர்ந்து அமைந்துள்ளது. சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.




 பொது தகவல்:
   
  சித்திரை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் இவர்கள், ஊர் சுற்றுவதில் மிகவும் விருப்பம் கொண்டவர்கள். கல்வி கேள்வியில் சிறந்து விளங்குவர். தைரியம் நெஞ்சில் நிறைந்திருக்கும். எதிரியையும் நேசிக்கும் பரந்த உள்ளம் கொண்டவர்கள். பிறருடைய குணம் அறிந்து செயல்பட்டு தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வர். வியாழன் (குரு) தன் மகனுக்காக வைகை நதிக்கரையில் துறை அமைத்து நாராயணனை நோக்கி தவம் செய்ததால் இந்த இடம் குருவி(ன்)த்துறை ஆனது.குருவின் தவத்தால் மகிழ்ந்த நாராயணனும் சித்திர வேலைப்பாடுடன் அமைந்த தேரில் வியாழ பகவானுக்கு காட்சி தந்து, கசனை மீட்டு தந்தார். இதனாலேயே இங்குள்ள இறைவன் சித்திர ரத வல்லப பெருமாள் என அழைக்கப்படுகிறார்.  
   




பிரார்த்தனை
   
 
சித்திரை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர்.வியாழனே இங்கு வந்து தவம் செய்த தலம் என்பதால், குரு(வியாழன்) தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு பரிகாரம் செய்தால் தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.வியாழன் பார்க்க விரைந்திடும் திருமணம் என்றும், புண்ணிய குரு பார்க்க புத்திர பாக்கியம் கிட்டும் என்றும் இங்கு வந்து பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.



   
நேர்த்திக்கடன்:
   

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.  




கோவில் விவரங்கள் :

மூலவர்                      :             சித்திரரத வல்லபபெருமாள்

அம்மன்/தாயார்       :             ஸ்ரீதேவி, பூமிதேவி

பழமை                           :                1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர்                                     :               குருவித்துறை, சோழவந்தான்

மாவட்டம்                 :               மதுரை


மாநிலம்                      :            தமிழ்நாடு
   

அமைவிடம் :

மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி போன்ற கோயில் வரை பஸ்கள் செல்லும். 

No comments:

Post a Comment