Tuesday, February 18, 2014

அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்-- அதிராம்பட்டினம்(தஞ்சாவூர் )


அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்-- அதிராம்பட்டினம்(தஞ்சாவூர்  )


நட்சத்திர கோவில்கள்


நட்சத்திரம் : திருவாதிரை


ஸ்தல வரலாறு :

முன்னொரு காலத்தில், அசுரர்களால் துரத்தியடிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுந்தனர். பிரதோஷ காலத்திலும், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளிலும், சிவபெருமான் உலாவரும் லோகங்களில் திருவாதிரை நட்சத்திர மண்டலமும் ஒன்று. இந்த மண்டலத்தில் நுழையவே அசுரர்கள் பயப்படுவர். அதே நேரம் அங்கு சென்று சரணடைந்தவர்களை அவர் அபயம் தந்து காப்பாற்றுவார்.

இதனால் சிவனுக்கு அபயவரதீஸ்வரர் என்று பெயர். எனவே திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறந்த பலன் தரும். பைரவ மகரிஷி, ரைவத மகரிஷி ஆகியோர் இத்தலத்தில் அருவமாக அபயவரதீஸ்வரரை வழிபாடு செய்வதாகக் கூறப்படுகிறது. ரைவதம் என்பது சிவனது முக்கண்ணிலும் ஒளிரும் ஒளியாகும். இந்த சக்தியின் வடிவமாக ரைவத மகரிஷி திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில் அவதரித்தார். இந்த முனிகள் இருவரும் திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. ஆதிரை லிங்கமாய் ஆமறை ஜோதியன் ஆதிரை தானதில் அபயமென்றருளுவன் ஆதிரை வதனழல் ஆகிடும் ஆதியில் ஆதிரு ஆதிரை ஆலமர் ஆரணா! என்ற திருவாதிரை கோயில் பற்றிய பாடலை, திருவாதிரை நட்சத்திரக்காரர்கள், அபயவரதீஸ்வரர் முன் நின்று பாடி வணங்கினால் சிவனின் திருவருளையும், ரைவத மகரிஷியின் அருளையும் பெறலாம்.




ஸ்தல பெருமை :

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், ராகு-கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் வாழ்நாளில் அடிக்கடி வழிபட வேண்டிய சிறந்த தலம் இது. திரிநேத்ர சக்தி கொண்ட தலம். தன்னை நம்பியவருக்கு அபயம் தரும் அபய வரதீஸ்வரராக இத்தல இறைவன் விளங்குகிறார். இத்தல அம்மன் தெற்கே கடலை பார்த்து அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயரும் உண்டு. சம்பந்தர் பாடலில் இத்தலம் வைப்புத்தலமாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரத்தன்றும் சித்தர்கள் இங்கு அரூப வடிவில் வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. திருக்கடையூருக்கு அடுத்தபடியாக எமபயம் போக்கும் தலமாக இத்தலம் விளங்குகிறது. சமயக்குரவர் மூவரில் சுந்தரரும், சம்பந்தரும் இத்தலத்தை தங்களது தேவார வைப்புத்தலமாக பாடியுள்ளனர்.




எம பயம் போக்கும் தலம்:
தீராத நோயால் அவதிப் படுபவர்கள், எமபயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். ஆயுஷ் ஹோமமும், மிருத்யுஞ்ஜய ஹோமமும் திருக்கடையூருக்கு அடுத்தபடியாக இங்கு அதிக அளவில் செய்யப்படுகிறது. இந்த நட்சத்திர பெண்களுக்கு எந்த தோஷத்தினால் திருமணத்தில் தடை இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த மன்னர் அதிவீரராமபாண்டியன் இத்தல இறைவனை வழிபட்டு பல அரிய திருப்பணிகள் செய்துள்ளார். ஆரம்ப காலத்தில் இத்தலம் திருஆதிரைப்பட்டினமாக இருந்து,அதிவீரராமன் பட்டினமாகி, தற்போது அதிராம்பட்டினமாக மாறிவிட்டது.


ஸ்தல சிறப்பு :

இத்தல அம்மன் தெற்கே கடலை பார்த்து அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயரும் உண்டு. சம்பந்தர் பாடலில் இத்தலம் வைப்புத்தலமாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரத்தன்றும் சித்தர்கள் இங்கு அரூப வடிவில் வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது.





பொது தகவல்:
 
 
திருவாதிரை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: மற்றவர்களிடம் எளிதில் பழகி தங்களின் நண்பராக்கும் திறமை உடையவர்கள். சாமர்த்தியமாக சம்பாதிக்கும் குணம் கொண்ட இவர்கள், அதை திட்டமிட்டு முறையாகச் செலவழிக்கவும் செய்வர். வாதம் செய்வதில் வல்லவர்களாக இருப்பர். கலைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டுவர். சுபவிஷயங்களை முன்னின்று நடத்துவர்.


 பிரார்த்தனை
 
 
திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எம பயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். ஆயுஷ் ஹோமமும், மிருத்தஞ்சய ஹோமமும் இங்கு அதிக அளவில் செய்யப்படுகிறது. எந்த தோஷத்தினாலும் திருமணத்தில் தடை இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.





நேர்த்திக்கடன்:
 
  சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
 

கோவில் விவரங்கள் :

மூலவர்                 :                       அபய வரதீஸ்வரர்

அம்மன்/தாயார் :                        சுந்தர நாயகி

தல விருட்சம்         :                        வில்வம்,வன்னி
 
பழமை                         :                        1000-2000 வருடங்களுக்கு முன்
 
ஊர்                         :                       அதிராம்பட்டினம்

மாவட்டம்                 :                        தஞ்சாவூர்

மாநிலம்                :                               தமிழ்நாடு






அமைவிடம் :


தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தை அடையலாம். 

No comments:

Post a Comment